Monday, October 22, 2012

காதற் குடிசை

உன் ஞாபகம்
கட்டுவதும்
உன் மௌனம்
இடிப்பதுமென..
பிழைப்புக்கும் சாவுக்குமாய்
மாறி மாறி
அலைகிறது என்
காதற் குடிசை..

இருளடர்ந்த
அதன் திண்ணையில்
குளிர் தாங்கி
இறந்து போனது
இன்னொரு
கனவுப் பூனை..

நேற்றைய மழையோடு
கொட்டிய
தனிமையின் விதைகள்
காடுகளாய் முளைக்கின்றன..

 தூரத்தை வெறிக்கும்
சாளரத்தின் வெளியே
பசியாய் அலைகிறது
ஒரு பட்டாம்பூச்சி..

இருக்கும் ஆசைகளை
எண்ணிப் புதைத்துவிட்டு
விடியலுக்குக் காத்திருக்கிறது
என் தூக்கம்.. 

கடைசியாய்
என் இரவுக்கு
எப்போது இரக்கம்
இருந்ததென
நினைவில்லை..