Monday, October 22, 2012

காதற் குடிசை

உன் ஞாபகம்
கட்டுவதும்
உன் மௌனம்
இடிப்பதுமென..
பிழைப்புக்கும் சாவுக்குமாய்
மாறி மாறி
அலைகிறது என்
காதற் குடிசை..

இருளடர்ந்த
அதன் திண்ணையில்
குளிர் தாங்கி
இறந்து போனது
இன்னொரு
கனவுப் பூனை..

நேற்றைய மழையோடு
கொட்டிய
தனிமையின் விதைகள்
காடுகளாய் முளைக்கின்றன..

 தூரத்தை வெறிக்கும்
சாளரத்தின் வெளியே
பசியாய் அலைகிறது
ஒரு பட்டாம்பூச்சி..

இருக்கும் ஆசைகளை
எண்ணிப் புதைத்துவிட்டு
விடியலுக்குக் காத்திருக்கிறது
என் தூக்கம்.. 

கடைசியாய்
என் இரவுக்கு
எப்போது இரக்கம்
இருந்ததென
நினைவில்லை..

Saturday, August 25, 2012

தேவதைகள்


கற்பினைப் போல்
என்னைக் காக்கிறது
உன் காதல்!
என் பாதையில்
ஒளியேற்றுகிறது,
உன்
சந்தோஷப் புன்னகை!
தொலைந்து போன
என் ராகங்களைத்
தேடித் தருகிறது
உன்
மகத்தான மௌனம்!
உன்
கண்ணீரில் துடைக்கிறாய்
என் குற்றங்களை..
தேவதைகள் தேவதைகளே...

கவசம்

என் ஆசைகள்
மரிக்காமல்
காப்பதும்
உன் காதலே..

மாற்றம்

நீ வரும் முன்பும்
இதே உலகம்,
இடம், மனிதர்கள்...
நீ வந்து
எல்லாவற்றிலும்
உன்னை
ஒட்டிவைத்து விட்டாய்..

கோரிக்கை

காலத்தின் இருளில்
குழந்தை போல்
நடக்கிறேன்..
உன்
காதலை
விளக்கெனக் கொடு..
என்
கைபிடித்து அழைத்துச் செல்..

பழு

என் இதயம்
சாமானியம்!
இசை, அன்பு, நம்பிக்கை..
தோல்வி, பயம், தடுமாற்றம்..
இன்ன பிற!
வைரங்களை விட,
ஓட்டைகள் நிறைந்த கூடை!
ஒரு
காதலைத் தாங்குவதே
மரண வலி... 
உன்
மௌனம்
அதன் மேல் பாறை!

நானும் நானும்

எப்பொழுதும்
எதற்காகவோ
அலைபாயும் மனம்..
இரைச்சல் அடங்கியதும்
மௌனம்!
மௌனம் தொடங்கியதும்
வலி!
வலி அயர்ந்து போனால்
வெறுமை!
எப்போதேனும் அமைதி!
கொஞ்சம் சந்தோஷம்!

Thursday, August 23, 2012

புறக்கணிப்பு

தெரிந்தோ தெரியாமலோ..
என் ஒவ்வொரு நாளிலும்
நீ நிரப்பாத இடங்களை,
தனிமையும் வலியும்
நிரப்புகின்றன..
சமயங்களில்,
உன்னை விடவும்
தனிமையே
நெருங்கி நிற்கிறது..
என் கைகளை
விடாமல் பிடித்தபடி..

Saturday, June 2, 2012

மௌனப் பிதற்றல்

உன்
ஞாபகம் நிரம்பிய
உறக்கமற்ற
என் இரவுகள்
ஒரு
புதைந்து போன ரகசியம்..
நீயும் அறியாதவை..
 
ஊமையின் வலிகள்..